பஸ் வண்டிக்காக தரிப்பிடத்தில் நான்
தொப்பை வயிறனாய் – ஆடி அசைந்து
வந்து சேர்ந்தது இல 155 பஸ்
ஜன்னல் ஓரத்தில் ஒரு காலி ஆசனம்
ஓடிச்சென்று அமர்ந்து கொண்டேன்
தலை முடியைக் குழப்பிய ஜன்னல் காற்றும்
காதில் ஒலித்த ரகுமான் இசையும்
காதல் மோகம் தூண்டியது
கண்ணை மூடி கற்பனையில் மிதந்த என்னை
கலங்கடித்துச் சென்றது மல்லிகைப்பூ வாசனை
கண்ணைத் திறந்து பூவைத் தேடிய என்னை
கண்ணால் கிறங்கடித்தாள்-அந்த வாசனைப் பெண்
தலை முடியை முக்காடிட்ட அவளை நான் நோக்க
அவள் என் கண்ணில் அவள் முகம் பார்த்தாள்
அவள் தைரியம் என்னை உசுப்பி விட்டது
முதல் பார்வையிலே மோனாலிசா ஓவியமாய்
உதடு பிரியாமல் அழகு காட்டிய அவள் முகம்
மூளையில் பசை போட்டு ஒட்டிக்கொண்டது
நேரில் நின்ற அவளைப் பார்த்தேனா – அல்லது
இதயத்தில் பதிந்த அவள் முகம் பார்க்கின்றேனா
என்று பிரித்து உணரமுடியாமல் திணறும் போது
கைக்குழந்தையுடன் ஒரு இளம் தாய்
ஆசனம் விட்டெழுந்து வண்டாக மலர் அருகே சென்றேன்
அவள் நோக்கித் திரும்ப - அவள் காதோர தங்க முடி
தோடின் மினுமினுப்பை மறைத்தது
அவள் என்னை நோக்கித் திரும்ப – அவள் அகன்ற கண்ணுடே
வேற்று கிரகம் நோக்கி பிரயாணம் ஆனேன்
அப்பொழுது காதில் ஒலித்த உயிரே பாடல்
நான் தமிழ் அவள் முஸ்லிம் என்பதை நினைவூட்டியது
ஆனால் நெஞ்சில் தோன்றிய உணர்வு
அவள் முகத்தைக்காட்டியது – மதத்தைக் காட்ட வில்லை.
பாதையின் திருப்பத்தில் வண்டி திருப்ப
அவள் கரம் என் கரம் மேல் பட்டது
தேவதை கரம் பற்றிய கணம்
இதய முள் செக்கன் முள் ஆனது
என் கையின் படபடப்பு
அவள் உடலை அதிர வைத்தது போலும்
கையை மீட்டவள் –இமைகளால் உணர்வு பேசினாள்
ஜன்னலை நோக்கியவள் – கதவை நோக்கி ஓடி
மணியை அடித்தாள்
அவள் இறங்கப் போவதை உணர்ந்த மனம்
இறப்பதாய் உணர்ந்தது.
தரிப்பிடம் அடைய விரைவாய் இறங்கியவள்
மீண்டும் தலையை உள்ளெடுத்து
இமைகளால் சிறகடித்து விட்டு மறைந்தாள்
மீண்டும் அதே வாசனை
வீசிக்கொண்டு இருப்பதோ என் இதயத்தில்.