Sunday, July 18, 2010

சூர்யாகண்ணன்

பரீட்சை நெருங்கிக்கொண்டிருப்பதால் பதிவிடுவதில் இருந்து கொஞ்சம் விலகி இருக்க நினைத்த என்னை,காலையில் படித்த செய்தி மிகவும் குழப்பிவிட்டது.
அதாங்க நம்ம பிரபல தொழில்நுட்பப் பதிவாளர் சூர்யாகண்ணன் அவர்களின் வலைப்பதிவு ஹக் (Hack) பண்ணப்பட்டிருக்கிறது. பாமரன் பக்கங்களில் பாலா சார் விவரமாக எழுதியுள்ளார்.ஏனோ அந்தத் தகவலை அவ்வளவு இலகுவாக எடுத்துக்கொள்ளமுடியவில்லை.ஏன் எனில் ,அந்த வலைப்பதிவூடாக நான் பெற்ற பயன்கள் பல.அவரின் வளர்ச்சியைப் பார்த்து பிரமித்துக் கொண்டிருக்கையில் இப்படி ஒரு அநியாயம்.
வலைப்பதிவோடு சேர்த்து ஜிமெயில்,யாஹூ,ரிடிஃப் மெயில், ஃபேஸ்புக், ட்விட்டர் அத்தனையும் களவாடப்பட்டிருக்கலாம் என்று பாலா சார் குறிப்பிட்டார்.நான் நினைகின்றேன் அவர் அனைத்துக்கும் ஒரே கடவுச்சொல் உபயோகித்து இருக்கலாம்.இந்தச் சம்பவம் நமக்கு கற்றுத்தரும் பாடம் தகவல் பாதுகாப்பு.

இத்தகைய நிலையிலும் மனதைத் தளரவிடாமல் backup பண்ணிவைத்ததைக்  கொண்டு உடனடியாக புதிய வலைப்பதிவைத் தொடங்கிய சூர்யாகண்ணனின் தன்னம்பிக்கையை பாராட்டாமல் இருக்க முடியாது.
அவருக்கு நாங்கள் குடுக்கும் ஆதரவுதான் அவரை மீண்டும் அதே ஈடுபாட்டோடு வலைப்பதிவில் முன்னோக்கி செல்ல துணைபுரியும்.
அவரது மாற்றப்பட முகவரி http://sooryakannan.blogspot.com/.

Thursday, July 15, 2010

Cut, Copy & Paste அனைத்துக்கும் தடை.


வில்லங்கமாக யோசிக்கிறது எண்டு முடிவாகிவிட்டது.அதன் அடுத்த கட்டமாக எமது கணணியை கண்டால் நண்பர்கள் தலைதெறிக்க ஓட வேண்டும்.அதற்கு என்ன பண்ண வேண்டும்.
அருமையான வழிமுறை ஒன்று உள்ளது.
எமது கணனியில் பின்வருவனவற்றைச் செய்துவிட்டால்,
1. Stops Cut
2. Stops Paste
3. Stops Copy
4. Stops Delete
5. Stops Copy To
6. Stops Move to
7. Stops Send To
8. Prevents renaming

பாவம் பய புள்ள எமது கணணியைப் பார்த்தால் அழுதே விடுவான்.இதை நாம் ஒன்றும் செய்யத்தேவையில்லை. அதற்குத்தான் Prevent (353KB)என்கிற freeware இருக்கிறது.
ஆனால் நம்மை விட வில்லங்கமானவனாக இருந்தால் என்ன பண்ணுவான்.Windows Task Manager போய் என்ன exe file இதற்க்குக் காரணம் என்று Processes இல் தேடிப்பார்ப்பான்.அங்கேயும் அதை தெரியாமல் செய்து விட்டால் (Disables Task Manager’s End Process button.).ஒரே வழி இடத்தைக் காலி பண்ணுவதான்.


அப்படி என்றால் இந்த முரட்டுக் குதிரையை எப்படித்தான் அடக்குவது என்று கேட்கிறீங்களா?
Install செய்த பின் setting இல் காணப்படும் Define Hot keys என்பதில் short cut key ஐ தெரிவு செய்தல்.இனி Right click பண்ணிப் பார்த்தால் மேலே குறிப்பிட அனைத்தும் disable ஆகக் காணப்படும்.மீண்டும் enable செய்வதற்கு மீண்டும் short cut keyஐ அழுத்துங்கள்.

அவ்வளவு தான்,எமது கணணி எம்மைத் தவிர அனைவருக்கும் வில்லனாக மாறிவிடும்.

குறிப்பு: windowsஇல் புகுந்து விளையாடுபவர்களுக்கு இதைத் தகர்ப்பது ஒன்றும் பெரிய வேலையில்லை.


இந்த சுட்டியைக் கிளிக் பண்ணி அந்தத் தளத்தில்தரவிறக்கவும்.

Sunday, July 11, 2010

பென் டிரைவ் (pen drive)தகவல் பரிமாற்றதைத் தடுத்தல்.

என்னங்கடா கதை எழுதிறேன் எண்டு ரீல் விட்டிட்டு இருந்தவனுக்கு என்னாச்சி?தொழில்நுட்பம் எல்லாம் கதைக்க வாரான் எண்டு யோசிக்கலாம்.எல்லாம் காலத்தின் கட்டாயம்.அத்தோட இது தாங்க நம்ம துறை.

என் நண்பன் நான் இருக்கும் போது பென் டிரைவ்ல அதைப் போட்டுத்தா, இதைப் போட்டுத்தா என்று கேட்க மாட்டான்.ஆனால் நான் இல்லாத சமயம் வந்து எனது தகவல்களை திருடிட்டு போய்விடுவான்.நண்பனாக இருந்தாலும் பின் மதிலால் பாய்ந்து வந்தால் திருடன் தானே?

(நடந்தத விடு,விசயத்துக்கு வா எண்டு நீங்க திட்டுறது கேட்குதுங்க!)
சரி,இதோட என் சுயபுராணத்தை நிறுத்திட்டு களத்தில குதிச்சிறேன்.



1. எமது கணனியில் USB போர்ட் ஐ disable செய்தல்.
start - run - regedit என்று டைப் பண்ணி என்டர் பண்ணுங்கள்.
"Registry Editor" window தோன்றும்.


HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\usbehci அல்லது
HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet \Services\UsbStor
ஐ கிளிக் செய்யவும்.(இரண்டும் ஒரே செயற்பாடு)
அப்பொழுது வலது புறத்தில் DisplayName,ErrorControl,Group,etc என்றவாறு
மாற்றக்கூடிய தெரிவுகள் காணப்படும்.

இப்பொழுது நாம் ஒரு முக்கிய பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
File - Export ஐ கிளிக் பண்ணி தேவையான இடத்தில் backup பண்ணிக் கொள்ளவும்.
ஒரு வேளை நாம் செய்தது தவறாயின் பழைய நிலைக்கு மீள இது உதவும்.

ஒவ்வொரு தடவையும் disable,enable செய்வதற்கு இவ்வாறு நீண்ட தூரம் பயணிக்க வேண்டியதில்லை.அதற்கு நாம் செய்ய வேண்டியது 
Favorites - Add to Favorites ஐ கிளிக் பண்ணி usb disable என்று பெயரிடவும்.

இனி usb ஐ disable செய்வதற்கு வலப்பக்க pane இல் உள்ள start ஐ double click பண்ணி value data வை 4(Hexadecimal)ஆக மாற்றவும்.usb ஐ enable செய்வதற்கு value data வை 3(Hexadecimal)ஆக மாற்றவும்.

இவற்றை தனித்தனியாக File -Export பண்ணி பொருத்தமான பெயரில் (தானாகவே registry file ஆகச் சேமிக்கும்)சேமித்து வைத்தால் அதை கிளிக் பண்ணுவதன் மூலமே enable,disable செய்யலாம்.

மாற்றத்தைச் செய்தபின் refresh (F5)பண்ணுவதன் மூலம் செயல் படுத்தலாம்.



இப்படி பண்ண முடியலையா?கவலை வேண்டாம்
start - run - devmgmt.msc = >DEVICE MANAGER window தோன்றும்.

கிளிக் universal serialbus controllers,sub menus ஐ right click பண்ணி disable
பண்ணலாம்.







2. USB thumb drive ஐ read-only ஆக மாற்றல்.(WriteProtect)
(USB thumb drive இல் இருந்து தகவல்களை எடுக்கலாம்,ஆனால் கணனியில் இருக்கும் தகவல்களை அதில் பதிய முடியாது.அதாவது சிலரது blood group போல,வாங்கலாம் ஆனால் கொடுக்க முடியாது.)


HKEY_LOCAL_MACHINE\System\CurrentControlSet\ Control\StorageDevicePolicies
செல்லவும்.

WriteProtect பண்ணுவதற்கு வலது பக்கத்தில் உள்ள WriteProtect ஐ double click பண்ணி value data வை 1(Hexadecimal)ஆக மாற்றவும்.

WriteProtect ஐ disable பண்ணுவதற்கு வலது பக்கத்தில் உள்ள WriteProtect ஐdouble click பண்ணி value data வை 0(Hexadecimal)ஆக மாற்றவும்.

மேலே குறிப்பிட்ட Export ,Add to Favorites போன்றவற்றை இங்கும்
பின்பற்றவும்.


(எதற்க்காக write protect ,usb disable பண்ணி வைத்திருக்கிறாய் என்று கேட்டால் ,பதில் சொல்வது உங்கள் திறமை.)



Sunday, July 4, 2010

அப்பா - மகன் உறவு...(தொடர்ச்சி)


முதலாம் திகதி வீதியில் அனாதையாக விட்டுச் சென்ற எனது பிள்ளையின் நினைவு இன்றுதான் எனக்கு வந்தது.அதாங்க நம்ம கதை.....

முன்னைய பதிவைப்படிக்க இதைக் கிளிக் பண்ணுங்கள்.
மெதுவாகப் பின்வாங்கிய மயூ ,அமைதியாக அனைவரது முகத்தையும் பார்த்தான்.அனைவரும் ஸ்தம்பித்து நின்றனர்.யாருமே எதுவுமே பேசவில்லை.ஒரு நீண்ட அமைதி.என்ன நினைத்தானோ ,காலில் செருப்பும் போடாமல் தலை தெறிக்க ஓடத்தொடங்கினான் மயூ.அனைவரும் அவனைக் கூப்பிட்டனர்.ஆனால் அவன் எதையும் கேட்காமல் ஓடிக்கொண்டு இருந்தான்.

உடனே அனைவரும் டேவிட்டை சூழ்ந்து “யாரா சொன்னாங்க அவன் அநாதை எண்டு?அவனுக்கு தானே அப்பா,அம்மா இருக்காங்களே!என்றனர் ஒருமித்து.டேவிட்டின் முகம் விகாரமாய் இருந்தது.தான் சொன்ன வார்த்தை அவனது மனதை அலைக்கழித்துக் கொண்டு இருந்தது.பின் மெதுவாக “என் அப்பாத்தான் என்றான்.உண்மையாடா !என்றான் தேவா.அப்பா ஒருதடவை சொன்னார்,ஆனால் உண்மையா ?,பொய்யா ? என்று எனக்குத் தெரியாடா “என்றான் பதட்டமாக.

வேர்த்துக் கொட்ட வீட்டுக்குள் நுழைந்த மயூ “அம்மா .... அப்பா... “ என்று ஓங்கிக் கத்தினான்.கிணற்றடியில் இருந்த அம்மாவும் ,அப்பொழுதுதான் ஆபிசால் வந்து உடை மாற்றிய அப்பாவும் பதறிக்கொண்டே ஓடிவந்தனர்.
“நான் அனாதையா ............... என்று கீர் என்று கத்தினான்.அவன் அம்மாவும் அப்பாவும் பேய் அறைந்த போல் நின்றனர்.சிறிது மௌனமாக இருந்த அவனது அப்பா “யாரு சொன்னது ?என்றார் கம்மிய தொண்டையால்.என்னோடு விளையாடும் டேவிட் தான்.நீங்க சொல்லுங்க உண்மையா ? என்றான் பதட்டமாக.அடியே லீலா உடுப்ப மாத்துடி,பனைமர திடலுக்கு போய்ட்டு வருவோம் என்றார் அமைதியாக.ஏன் நீங்களும் வந்து விளையாடவா ? எனக்கு இப்பவே உண்மையைச் சொல்லுங்களேன் என்று அழுது கொண்டே கெஞ்சினான் மயூ. 

“நான் உன்னிடம் மட்டும் சொன்னா உன் பசங்களுக்கு தெரியாது.நீ எங்க பையன் எண்டு, எல்லோருக்கும் சொல்றதாண்ட என் கடமை “ என்று அவனை மார்போடு அணைத்துக்கொண்டார்.பின் நடந்த சம்பவத்தை கேட்டறிந்தார்.அந்த நேரத்தில் அம்மாவும் தயாராகி விட மூவரும் திடல் நோக்கி பயணமானார்கள்.

மயூ போன பின் விளையாடுவதற்கு யாருக்கும் மனம் வரவில்லை.டேவிட் சொன்னது சரியா ? தவறா ? என்று சூடாக விவாதித்துக் கொண்டிருந்த பசங்க, மூவரும் ஒன்றாக வருவதைப் பார்த்து எழுந்து நின்றனர்.டேவிட் மட்டும் பனைமரம் பின்னால் மெதுவாக பதுங்கினான்.
மூவரும் திடலுக்கு வர அனைவரும் வந்து சூழ்ந்து கொண்டனர்.அமைதியாக அனைவரையும் சுற்றிப் பார்த்த மயுவின் அப்பா “மயுவின் அப்பா ,அம்மா யார் எண்டு உங்களுக்குத் தெரிய வேண்டும் என்ன ?  ,நான்தான் அப்பா ,அவங்கதான் அம்மா.
“உங்க யாருடைய பெற்றார் ஆவது நாங்க எங்க பிள்ளையில காட்டுகின்ற அன்ப விட அதிகமாகக் காட்டினா அவன அநாதை எண்டு சொல்லுங்க.ஆனா மற்றவரைப் பார்த்து அநாதை எண்டு சொல்லும் போது சற்று யோசித்துப் பாருங்க ,நாளைக்கு உங்க பெற்றார் இறந்து போனா நீங்க ....
படைப்பில எல்லோரும் அனாதைகள்தான்,வளர்ப்பில் தான் அவங்க பெற்றோரைப் பார்க்கிறாங்க என்று அவர் சொல்ல அனைவரும் அவர் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தனர்.

“யாரப்பா என் பிள்ளைய அப்படிச் சொன்ன ?என்றாள் மயுவின் அம்மா.
பதுங்கிய டேவிட்டை யாரோ முன்னாள் தள்ள ,தலை குனிந்து அவன் நின்றான்.எப்ப நீங்க மற்றவர சாதி,சமயம்,ஊனம்,வறுமை, பிறப்பு குறித்துச் சொல்லுவீங்களோ நீங்க தோற்றுப் போய்டீங்க என்று அர்த்தம்.நேரடியா ஜெயிக்க முடியாத காரணத்தால நீங்க தூக்கிற ஆயுதம் தான் இது.உன்னை நீ திருத்திக் கொள் என்றார் சாந்தமாக.
அப்பாவோடும் அம்மாவோடும் திடலை விட்டுப் போய்க கொண்டிருந்த மயுவின் கையை யாரோ பிடித்தது போன்று இருந்தது.திருப்பிப் பார்க்க டேவிட்,கண்கலங்கியவாறே “என்ன மன்னிச்சிடுடா,வாவன் விளையாட என்றான்.
மயூ அப்பாவின் முகத்தைப் பார்க்க ,அவர் புன்னகையோடே தலையசைத்தார்.அவன் துடுப்பை நோக்கி ஓடினான்.


Thursday, July 1, 2010

அப்பா - மகன் உறவு...(சிறுகதை)


அறைக்குள் இருந்து வெளிவந்த மயூரன் மணிக்கூட்டைப் பார்த்தான்.மணி 4 மணியைக்காட்டியது.பார்த்தது தான் தாமதம் டீசேர்டைக்கழற்றி கதிரையில் வீசிவிட்டு கிணற்றடியை நோக்கி ஓடினான்.அங்கே அவன் அம்மா பூ மரங்களுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டு இருந்தார்.போன வேகத்திலே வாளியைப்பறித்து முகத்தைக்கழுவினான்.என்னப்பு விளையாடவா ? 6 மணிக்குள்ள வந்திடு.அப்பாட்ட நான் திட்டு வாங்கேலாடா “என்றாள் அம்மா.எந்தப்பதிலும் சொல்லாமல் வாளியைத் தடார் என்று போட்டு விட்டு ஓடிவிட்டான்.ஏனோ அம்மா லீலாவிற்கு அவனது துடிப்பான செய்கை கோபத்தை ஏற்ப்படுத்துவதில்லை.இப்பொழுது தானே 13 வயது.அந்த வயதுக்குரிய விளையாட்டுப் புத்தி.பயல் படிப்பில் வேறு நல்ல சுட்டி.

மயூரனின் வீட்டில் இருந்து நாலு வீடு தள்ளி பனைமரத்திடல்.அந்த வளவின் சொந்தக்காரர் அமெரிக்காவிற்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்து விட்டார்.அவரது புண்ணியத்தால் அந்த சுற்று வட்டார பசங்களுக்கு ஒரு மைதானம் அமைந்து விட்டது.அந்த வளவில் 5 பனை மரங்கள்,ஒவ்வொன்றும் நல்ல உயரம்.பனை மரத்தின் தலைப் பகுதியை பார்த்தால் சிலிர்த்த முடியுள்ள சிங்கத்தின் முகம் போன்று மிரட்சியூட்டும்.இருட்டில் அதன் சலசலப்பே பையன்களை மிரட்டி வீடு செல்ல வைக்கும்.
மயூரன் திடலுக்குச் செல்லும் போது அணி பிரிப்பதற்காக டேவிட்டும் குணாலும்  கால்வைத்துக்கொண்டு இருந்தார்கள்.குணாலின் பாதம் டேவிட்டின் பாதத்தைத்தொட்டது.சந்தோஷத்தில் கூச்சல் போட்ட குணால் மயூரனை தனது அணிக்காக முதலில் தெரிவு செய்து கொண்டு அவனைக்கட்டிப்பிடித்தான்.பின் இரண்டு அணிக்கும் தலா 6 பேர் வருமாறு பிரிக்கப்பட்டன.
டேவிட் ஒரு சிறு கல்லை எடுத்து தனது பெருவிரலுக்கும்  சுட்டு விரலுக்கும் இடையே வைத்துவிட்டு கையைச் சுற்றி மாயவித்தை எல்லாம் காண்பித்து விட்டு குணால் முன்னாடி கையை நீட்டினான்.கையை நசித்து அவனது முக பாவனையை நோக்கியவாறு இருக்கு என்றான்.டேவிட் கையை விரிக்க கல் கீழே விழுந்தது.துள்ளிக்குதித்த குணால் அணியினர் முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தனர்.

பனைமரத்தில் செங்கல் கொண்டு கீறப்பட விக்கெட் முன்னால் துடுப்பெடுத்தாட மயூரனும் மற்றைய பக்கம் தேவாவும் சென்றனர்.அந்த மைதானத்தின் விதிகள் ICC  யிடம் இருந்து பலவகையில் முரண்பட்டது.புதியவர் யாரும் வந்தால் விதிகள் விளங்கப்படுத்த 5 நிமிடம் தேவை.வரதன் மாமா வீடு போனால் 2 ரன்ஸ்,வேலன் அண்ணன் வீடு போனால் அவுட் , இப்படிப் பல.( வரதன் மாமா பந்து போனால் எடுத்து கொடுப்பார்,ஆனால் வேலன் அண்ணன் வீட்ட போனால் புதுப்பந்து வாங்கணும்).

வழமை போல மயூரன் தான் தான் இந்த ஏரியா சச்சின் என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தான்.3 ஓவருக்கு 30 தாண்டிட்டு.மயூரன் 6 உம் 4 உம் எண்டு விளாச டேவிட் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன.அப்பொழுது மயூரன் உயர்த்தி அடித்த பந்து பனையோலையில் உரசியவாறு சென்று எல்லைக்கு சற்று முன்னாள் கீழ் நோக்கி வர அதை அற்புதமாக தாவி டேவிட் பிடித்தான்.அவனது சந்தோசத்திற்கு அளவே இல்லை.அவனது அணியினர் அவனைத் தூக்கிக் கூச்சல் போட்டனர்.அப்பொழுது மட்டையைத் தூக்கிக் காண்பித்த மயூ “நாட் அவுட் “ என்றான்.ஏன்  ? “ என்று கத்தியவாறு டேவிட் அணியினர் ஓடிவந்தனர்.பந்து மரத்தில் பட்டது என்றான்.மயூ அணியினரும் ஆமா போட்டனர்.ஆனால் அடுத்து களமிறங்க தயார் ஆக இருந்த குணால் மௌனமாக இருந்தான்.
குணாலின் மௌனத்தை சாட்சியாக வைத்து டேவிட் மயூ கையில் இருந்த துடுப்பு மட்டையை பறிக்க முயல ,இருவரும் பரஸ்பரம் சட்டையை பிடித்துக்கொண்டனர்.மயூ அவனை நோக்கி “ அலாப்பி! கள்ளன்.... என்று கத்தினான்.
அப்பொழுது டேவிட் “போடா அனாதை ! என்றான்.யாருமே அந்த வார்த்தையை எதிர்பார்க்கவில்லை.அங்கே திடீர் என்று நிசப்தம்.சற்று நேரத்திற்கு யாருமே எதுவும் பேச வில்லை.
தொடரும்....
(கதையை இவ்விடத்தில் நிறுத்த எனக்கும் இஷ்டம் இல்லை,ஆனால் இவ்வளவு தூரம் பொறுமையாய் படித்த உங்களை இன்னும் சோதிக்கக் கூடாதல்லவா.விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம்.)