Monday, April 23, 2012

என் நாய்க்குச் சமர்ப்பணம்



கடந்த மாதம் ஆரம்பித்த தொடர்கதையானது பாதியிலேநிற்கின்றது. தொழில்க் கடமைக்கு மத்தியில் பரீட்சைக்கு தயாராகவேண்டிய சூழ்நிலை.எழுதுவதற்கான ஆசை அதிகமாய் இருந்தாலும் அதைவிட அவசியமான கடமைகள் இருப்பதனால்,வலைப்பதிவில் இருந்து சற்று விலகியிருக்க தீர்மானித்திருந்தேன்.அதையும் தாண்டி பதிவு எழுதத்தூண்டியது,இன்று நடந்த சம்பவம்.




உறவு ஒன்று பிரிகையில் ஏற்ப்படும் வலியானது, வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.இரவு நித்திரை செய்வதற்கு முன்,காலையில் 6 மணிக்கு எழுப்பிவிடுங்கள்.மனனம் செய்வதற்கான பாடம் அதிகமாக இருக்கின்றது என்று திரும்பத்திரும்பச் சொல்லிவிட்டு அலாரதையும் வைத்துவிட்டுப்படுத்தேன்.காலையில் 5.30 மணிக்கே அப்பாவின் குரல் அலாரத்தை முந்திக்கொண்டு எழுப்பியது.பாவம்,களைத்துப்போய்ப் படுக்கின்றான்,என்ற அம்மாவின் தயவில் 6 மணி மட்டும் தூங்கியாகிவிட்டது.எனினும் தூக்கச் சுகம் இன்னமும் இறைஞ்சிக்கொண்டு இருந்தது.எழுந்து,பாதி திறந்த கண்ணுடன் சிறுநீர் கழித்துவிட்டு,இன்னும் அரை மணித்தியாலம் படுக்கின்றேன்,எழுப்புங்கள் என்று அம்மாவிடம் சொல்ல வாய்திறக்க ,பைபிளைப் படித்துக்கொண்டே என்னை முந்திக்கொண்டவராய் “நம்மட நாய் (ரெமோ) வீ(வி)தியில் அடிபட்டுச் செத்துவிட்டது என்றார்.தூக்கம் ஒரு நொடியிலே துலைய துக்கம் தொண்டையை இறுக்கியது போன்ற உணர்வு.
குரலைக் கனைத்துக் கொண்டே “என்ன என்ன??? என்று கேட்க “இப்பொழுதுதான் பக்கத்துக்கு வீட்டு அங்கிள் கோவிலுக்கு போய்விட்டு வரும் போது வீதிலில் அடிபட்டு இறந்த நம்ம நாயைப் பார்த்து விட்டு வந்து சொன்னார்.அதைப் பார்க்கத்தான் அப்பா போய் இருக்கின்றார்என்றார் அம்மா சற்றே கம்மிய தொண்டையுடன்.
சே......நேற்றுத்தானே இடியப்பத்துடன் இறைச்சி முள்ளைக் குழைச்சி வைத்தேனே,ஏன் அது வீதிக்குப் போயிற்று,என்று என்னுள் தலையைத் தேய்த்துக் கொண்டு வெறுத்துக் கொண்டிருக்க,அப்பா வந்து விட்டார்.
இருவருமாய்ப் போய் ஒரு சாக்குக்குள் நாயைப் போட்டுக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குள் கொண்டுவந்து சேர்த்தோம்.பெரிதாய் வெளிக்காயம் தெரியவில்லை.ஆனால் தலையில் இருந்து வீதியில் காய்ந்திருந்த இரத்தக்கறை ஏதோ பெரிய வாகனத்தில் மோதி இறந்ததை உறுதிப்படுத்தியது.

                   ரெமொவுடன் எனது தம்பி சதுஷன்

உணர்வுகளையும் சேர்த்துக் கொண்டே நாயை வளவிற்குள் தாட்டாகிவிட்டது.முழுகி விட்டு வீட்டுக்குள் வர,அம்மா 7 வருடத்திற்கு முன் என் தம்பி அந்த நாயை வீட்டுக்குள் கொண்டுவந்ததை மீட்டுக்கொண்டிருந்தார்.குடும்பமாகச் சேர்ந்து நாயைப் பற்றிப் பேசி விட்டு என் அறையில் வந்து உட்கார்ந்தேன்.
ரெமோவின் எண்ணங்கள் அலையென மனதில் போங்க ஆரம்பித்தது.கொழும்பில் இருக்கும் போது அம்மாவிடம் இரவில் போன் பேசும் போது ,தவறாமல் கேட்கும் கேள்வி “ரெமோ எப்படியம்மா இருக்கு??? “,அந்தக் கேள்விக்கு இனி அவசியம் இல்லை.
நான் ஊருக்கு வரும் போது,என்னை முதலில் வரவேற்கும் உயிர் அதுதான்.இனி அந்த உயிர் என்னைக் கடந்துசென்றுவிட்டது.
நேற்று அதிகாலை நான் ஊருக்கு வரும் போது என்னைக்கண்டு ஓடி வந்து என்னைச் சுற்றுக் கொண்டு அது தன் மொழியில் ஏதோ பேச முயன்ற போது,சீ நாற்றம் தள்ளிப் போ............ என்ற வார்த்தை இன்னும் கண்ணீரை முட்ட வைத்துக்கொண்டிருகின்றது.
நீ போட்ட ஒரு பிடிச்சோற்றுக்காக, உன்னை தன் உயிரிலும் மேலாக நேசிக்கும் ஒரு ஜீவன் எதுவென்றால் அது நாய் தான்.ரெமோ உன்னை நான் எந்த அளவிற்க்கு நேசித்தேன் என்பதற்கு இதை எழுதி முடிக்கும் போது நான் சிந்திய கண்ணீர்த்துளிகள் சாட்சி.
REMO ,I MISS YOU DAA…………..

ரெமோவை மையமாக வைத்து நான் எழுதிய சிறுகதையைப் படிக்க

7 comments:

Lakshmi said...

வளர்ப்பு பிராணிகளை ஆசையுடன் வளர்த்து அனியாயமாக பறி கொடுப்பது கொடுமை. நானும் என் பதிவில் இதுபற்றி பெட் அனிமல் பகுதியில் எழுதி இருக்கேன். வளர்த்தவங்களுக்குதான் அந்த ஃபீலிங்க் புரிஞ்சுக்கமுடியும்.

somasundaram movithan said...

@Lakshmi
உண்மைதான் அம்மா.
நாயோ,மனிதரோ;அந்த உயிருடன் நாம் கொண்ட உறவிலே அந்த பிரிவின் வலி தங்கியுள்ளது.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல குணம் கொண்ட உங்களுக்கு பாராட்டுக்கள் !

somasundaram movithan said...

@திண்டுக்கல் தனபாலன்
அண்ணா,ஒரு உயிர் நம்மை நேசிக்கும் போது,அதன் மீது பாசம் வருவது இயல்புதானே.

தங்கம் பழனி said...

பாசத்தின் வலி(மை)யை உணர்ந்து கொண்டேன்.

somasundaram movithan said...

@தங்கம் பழனி
//பாசத்தின் வலி(மை)யை உணர்ந்து கொண்டேன்.//

நீண்ட காலத்திற்குப் பின் ஓர் கவித்துவமான பின்னூட்டம்.சீக்கிரமாய் எழுதத்தொடங்க வேண்டும்.:-)

chezhiyan said...

வணக்கம்
தங்கள் வலைப்பதிவு மிக அருமை
என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
வாசிக்க இங்கே சொடுக்கவும்
http://kavithai7.blogspot.in/
புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
என்றும் அன்புடன்
செழியன்.....

Post a Comment